பாலக்கோடு அருகே, மதுக்கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பா.ம.க.வினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், வெள்ளிச்சந்தையில் அரசு மதுக்கடை உள்ளது. இக்கடையை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றி, அருகாமையில் உள்ள ஜாகீர் கொட்டாய் கிராமத்தில் வைக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியானது.
இதைக் கண்டித்து, பா.ம.க.வினர் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் திரண்டு கைகளில் துடைப்பங்களை ஏந்தி, நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மதுக்கடையை அகற்ற வேண்டும். ஜாகீர் கொட்டாய் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் மதுக்கடை அமைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து, தகவல் அறிந்த, போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், மதுக்கடை அமைக்கும் நடவடிக்கை கைவிடப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
பாமக மாநில துணைப் பொதுச் செயலர் சாந்தமூர்த்தி, மாவட்டச் செயலர் சண்முகம், மகளிர் அணி மாநில துணைச் செயலர் சரவணகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.