தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 334 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் கே. விவேகானந்தன் அறிவுறுத்தினார்.
அம்மா திட்ட முகாமில் முதியோர் உதவித் தொகை கோரி மனு அளித்தவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 25 பயனாளிகள் இறுதி செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வீதம் உதவித் தொகை வழங்குவதற்கான ஆணைகளை குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கினார் ஆட்சியர்
கே. விவேகானந்தன்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சித்ரா, மாவட்ட
ஆதிதிராவிடர் நல அலுவலர் பாஸ்கர், கலால் உதவி ஆணையர் மல்லிகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.