மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து, அதற்கேற்ப ஆசிரியர்கள் கற்பித்தல் முறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றார் அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் கே.நந்தகுமார்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், தருமபுரி பச்சமுத்து கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் தொடக்கக் கல்வியின் தரம் உயர்த்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்து பேசினார்.
கூட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் கே.நந்தகுமார் பேசியது: தமிழக அரசு தொடக்கக் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து, அதற்கு தகுந்தாற்போல், ஆசிரியர்கள் கற்பித்தல் முறைகளை வலுப்படுத்த வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் அதிக அளவில் பள்ளிகளை பார்வையிட்டு, அப்பள்ளியில் செயல்படுத்தும் கற்றல் முறைகள் குறித்தும், மாணவர்களின் கற்றல் திறன்கள் குறித்தும் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இக்குறிப்புகளின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இணை இயக்குநர் பி.பொன்னையா, முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) பொன்முடி, மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் பழனிசாமி, அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் கே.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.