தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் கே.செளந்திரம் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எம்.வெற்றிவேல், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில், மத்திய அரசு வழங்கியதைப் போல, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். 2016 ஜனவரி 1 முதல் 2017 செப்.9 வரையிலான கால ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படி ரூ.1000 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.