தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக சமூக ஊடகங்களில் வெளியான விடியோ விவகாரத்தில், இருவரை பணியிடை நீக்கம் செய்து சமூக நலத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊர்நல அலுவலராகப் பணியாற்றி வருபவர் மாதம்மாள். அதுபோல பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விரிவாக்க அலுவலராகப் பணியாற்றி வருபவர் மகாதேவி.
இவர்கள் இருவரும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில், பயனாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் விடியோ காட்சிகள் வெளியாயின . இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு அண்மையில் உத்தரவிடப்பட்டது.
மாவட்ட நிலையிலான அலுவலர்களின் விசாரணையில், கொடி நாளுக்கு வசூல் செய்ததாக இருவரும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. விசாரணை விவரங்கள் சென்னையிலுள்ள சமூக நலத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், மாதம்மாள், மகாதேவி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சமூக நலத் துறை இயக்குநர் புதன்கிழமை உத்தரவிட்டார். இருவருக்கும் புதன்கிழமை இந்த உத்தரவு வழங்கப்பட்டது.