பள்ளிவாசல், தர்காக்கள், மதரசாக்களில் பணிபுரிவோர் அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான வாரிய அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம் இயங்கி வருகிறது. இதன் மூலம் பள்ளிவாசல், தர்காக்கள் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் 18 முதல் 60 வயது வரை உள்ளோரை உறுப்பினர்களாகப் பதிவு செய்து உலமா அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை, விபத்து நிவாரணம், மூக்குக் கண்ணாடி உதவித் தொகை மற்றும் முதியோர் உதவித் தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
உறுப்பினர்கள் தங்களது பதிவை 3 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் புதுப்பிக்க வேண்டும். தற்போது இந்தப் புதுப்பித்தலுக்கு வரும் அக். 21ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
புதுப்பிக்கத் தவறியவர்கள் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.