தருமபுரி மாவட்டத்தில் 25,314 பெண்களுக்கு "அம்மா குடும்ப நலப் பெட்டகம்' அளிப்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்
தருமபுரி மாவட்டத்தில் ரூ. 3.50 கோடி மதிப்பில் 25,314 பெண்களுக்கு "அம்மா குடும்ப நலப் பெட்டகம்' வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பொது சுகாதாரத் துறை மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் "அம்மா குடும்பநலப் பெட்டகம்' வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015 செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்தப் பெட்டகத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான துண்டு, உடை, படுக்கை, கொசுவலை, நாப்கின், 100 மிலி அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மிலி ஷாம்பு, சோப்புடன் சோப்புப் பெட்டி, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, கைகழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு சோப்பு, தாய்ப்பாலை அதிகரிக்க செளபாக்கியா சுண்டி லேகியம் உள்ளிட்ட தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்கத் தேவையான 16 வகையான பொருள்கள் உள்ளன.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கர்ப்பிணிப் பெண்கள் வருகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 48 பிரசவங்கள் நடைபெறுகின்றன.
கடந்த 2015 செப்டம்பர் முதல் தற்போது 2017 செப்டம்பர் வரை மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13,754 பெண்களுக்கு ரூ. 1.90கோடி மதிப்பில் இப்பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் 11,560 பெண்களுக்கு ரூ. 1.60 கோடி மதிப்பிலும் இந்தப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் மாவட்டம் முழுவதும் 25,314 பெண்களுக்கு ரூ. 3.50 கோடி மதிப்பிலான அம்மா குடும்ப நலப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.