விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, அக் கட்சியினர் தருமபுரியில் பனை விதைகள் நடவு செய்தனர்.
தருமபுரி அருகே இலக்கியம்பட்டி ஏரியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் த.ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 பனை விதைகள் நடப்பட்டன. இதைத் தொடர்ந்து, பாகலஅள்ளி, சிவாடி, இண்டூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளில் சுமார் 1,000 பனை விதை நடவு செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டச் செயலர் ராமன், மாவட்ட துணைச் செயலர் மின்னல் சக்தி, செய்தித் தொடர்பாளர் த.கு.பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல, வருகிற ஆக.31-ஆம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 10 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
நல்லம்பள்ளி வட்டத்திலுள்ள பாகலஅள்ளி ஏரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மா.சக்தி தலைமை வகித்தார். இந்த ஏரிக் கரையில் சுமார் 100 பனை விதைகளை அக்கட்சியினர் விதைத்தனர்.
போச்சம்பள்ளியில்...
அரசம்பட்டி அருகேயுள்ள பி.பழனம்பாடி, காந்திபுரம் கிராமத்தில் கட்சியின் மாநில துணைச் செயலர் செய்தி தொடர்பு மையம் சே.ஜீவானந்தம் தலைமையில் விழா நடைபெற்றது.
இதில், பாரூர் மேற்கு கால்வாய், பி.பழனம்பாடி, காந்திபுரம், பாரூர், அரசம்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பனை விதைகள் நட்டனர், தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா ஆகியவற்றை வழங்கினர்.