பாலக்கோடு அருகே மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.66 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பி.செட்டிஅள்ளியில் கூட்டுறவுத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்து, 8 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.66 லட்சம் கடனுதவி வழங்கி பேசியது:
தருமபுரி மாவட்டத்தில், 131 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், 2 மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு சங்கங்கள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமையகம் உள்பட 20 கிளைகள் கணினிமயமாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. கூட்டுறவுத்துறையின் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பெற்று பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை
மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.
பாலக்கோடு சர்க்கரை ஆலைத்தலைவர் கே.வி.அரங்கநாதன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரேணுகா, துணைப் பதிவாளர்கள் சரவணன், ரவிச்சந்திரன், வட்டாட்சியர் அருண்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.