விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால், 4 அரசுப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
கடந்த 2015-ஆம் ஆண்டு தருமபுரியிலிருந்து ஒகேனக்கல் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, ஒகேனக்கல் மலைப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த தீயணைப்பு வீரர் சுதாகர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக இழப்பீடு கோரி, உயிரிழந்த சுதாகரின் மனைவி லீலாவதி மற்றும் குடும்பத்தினர் தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் உயிரிழந்த சுதாகரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக, போக்குவரத்துக் கழகம் ரூ.51,62,605 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இருப்பினும், போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காததால், மீண்டும் அதே நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் நிறைவேற்று மனு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கடந்த 2017 ஆகஸ்ட் 18-ஆம் தேதி மனுதாரருக்கு விபத்து வழக்கில், வட்டியுடன் ரூ.59,74,835 போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் எனவும், தவறினால், பேருந்துகளை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வழக்கு தொடர்பாக 3 நகரப் பேருந்துகள் உள்பட 6 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.
இவற்றில், குறிப்பிட்ட நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகை செலுத்துவதாக உறுதியளித்து, 4 பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் நிர்வாகம் சார்பில் மீட்டு கொண்டு செல்லப்பட்டன. ஆனால், உறுதியளித்தவாறு இழப்பீட்டுத் தொகை வழங்காததால், மீண்டும் நீதிபதி உத்தரவின் பேரில், தருமபுரி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 4 அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனர்.