தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் திருவிழாவையொட்டி, ஒப்பந்ததாரர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் பெறுவதாக தருமபுரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சுப்பிரமணி தலைமையிலான குழுவினர், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலகங்களில் சுமார் 3 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அலுவலகத்துக்குள் வந்த இரண்டு பேரிடம் ரூ.31 ஆயிரம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ரூ.10,800 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அலுவலகத்துக்குள் வந்த இரண்டு பேரும் தங்களது சொந்தத் தேவைக்காக, பணம் கையிருப்பு வைத்திருப்பதாக தெரிவித்தனர். அதேபோல, வட்டார வளர்ச்சி அலுவலரும், தனது மருத்துவ செலவுக்காக பணம் வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அவர்களிடம் எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெற்றுக்கொண்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார், அப்பணத்தை அவர்களிடமே ஒப்படைத்து திரும்பிச் சென்றனர்.