அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை பெற்று, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற இச்சங்கத்தின் மாதாந்திர மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பெ.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சதாசிவம் வரவேற்றார். முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.மாணிக்கம், மாவட்டப் பொருளாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு 2016 ஜன. 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தி நிலுவைகளை வழங்கியுள்ளதை போல, மாநில அரசும் 21 மாதங்களுக்கான நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.