அரூரில் உள்ள வர்ணீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது அருள்மிகு வர்ணீஸ்வரர் திருக்கோயில். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த திருக்கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
இந்த கோயில் வளாகத்தில் பக்தர்கள் நீராடுவதற்கான பழமையான குளம் உள்ளது. ஆனால், அரூர் பெரிய ஏரியின் ராஜகால்வாய் வழியாக செல்லும் கழிவு நீரானது கோயில் குளத்தில் கலப்பதால், குளம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால், கோயில் குளத்தில் பக்தர்கள் நீராட முடியாத நிலையுள்ளது. வர்ணீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால் கோயில் கட்டடம் சேதமடைந்துள்ளது. அதேபோல், கோயில் வளாகமும் தூய்மையான முறையில் பராமரிக்கப்படுவதில்லை.
எனவே, வர்ணீஸ்வரர் கோயில் குளத்தில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றவும், கோயில் வளாகத்தை தூய்மையான முறையில் பராமரிக்கவும் இந்து சமய அறநிலையத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.