தேனி மாவட்டம், குரங்கணி வனப் பகுதியில் காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த தனியார் நிறுவன மேலாளர் நிஷாவின் (30) உடல் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மாயாபஜாரைச் சேர்ந்த தமிழ்ஒளி, சென்னை வேளச்சேரியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் மத்திய தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவரது மூத்த மகள் நிஷா, பி.டெக். , இங்கிலாந்தில் எம்.எஸ். பயின்றுள்ளார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மலையேற்றப் பயிற்சிக்காக குரங்கணி வனப்பகுதிக்கு குழுவினருடன் சென்ற நிஷா, அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதில் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவரது உடல் பாப்பிரெட்டிப்பட்டிக்கு எடுத்து வரப்பட்டது. அரூர் வருவாய் கோட்டாட்சியர் கே.பத்மாவதி, வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உறவினர்கள், அவருடன் பணிபுரிந்த தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிஷாவின் உடல் பாப்பிரெட்டிப்பட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.