வேலைக்குச் செல்லும் மகளிருக்கு அரசு சார்பில் பாதுகாப்பான விடுதி வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சமூக சமத்துவப் படை கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக் கட்சி சார்பில் அரூரில் உலக மகளிர் தின விழா, மாநில மகளிர் அணித் தலைவர் ம.மணிமேகலை தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் வேலைக்கு செல்லும் மகளிருக்கு தங்குவதற்காக அரசு சார்பில் விடுதி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அரசியல் அதிகாரம் பெறும் வகையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
வன்கொடுமையால் பாதிக்கப்படும் மகளிருக்கு ரூ. ஒரு கோடி நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
விழாவில் சமூக சமத்துவப் படை கட்சியின் மாவட்டத் தலைவர் சா.புத்தமணி சாக்கரடீஸ், மாநிலச் செயலர்கள் கோகுல் சாமிநாதன், பி.சுதாகர், மாநில பொதுச்செயலர்கள் தங்க மோகன்ராஜ், அ.மகாராஜன், பூங்கா. மனோகரன், நிர்மலா, பேராசிரியர்கள் மல்லிகா, ஜோதி ராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.