ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திலிருந்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு மாதங்களில் ரூ. 1.21 கோடி மதிப்பில் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கியுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் நாட்டின் "நவரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவை இவற்றின் பிரதான உற்பத்திப் பொருள்கள். ஒவ்வொரு பொதுத் துறை மற்றும் பெருநிறுவனங்களும் அதன் லாபத்தின் ஒரு பகுதியில் இருந்து சமூகப் பணிகளில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கு முதல் முறையாக பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களில் தருமபுரி மாவட்டத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 86 லட்சம் மதிப்பிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, தருமபுரி, காரிமங்கலம் ஆகிய மூன்று வட்டங்களில் 56 அரசுப் பள்ளிகள், 2 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 6 சமுதாயக் கூடங்களுக்கு 26 தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்புகளும் (ஆர்ஓ), 6 கழிப்பறைகளும், 8 கணினிகளும், 4 அச்சிடும் இயந்திரங்களும் மற்றும் மேசைகள், நாற்காலிகள், புத்தக அலமாரிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி ஆகிய மூன்று வட்டங்களில் 49 அரசுப் பள்ளிகள், 2 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 சமுதாயக் கூடங்களுக்கு 24 தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்புகளும் (ஆர்ஓ), 18 கழிப்பறைகளும், 6 கணினிகளும், 4 அச்சிடும் இயந்திரங்களும் மற்றும் மேசைகள், நாற்காலிகள், புத்தக அலமாரிகளும் வழங்கப்பட்டுள்ளன.