இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இது குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக விண்வெளி வாரத்தையொட்டி , திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன. 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, விண்வெளிச் சுற்றுலா என்கிற தலைப்பிலும், 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வேற்றுக் கிரகத்தில் ஒன்றுப்பட்ட குடியிருப்பு என்கிற தலைப்பிலும், ஆங்கில வழியில் பயிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஸ்பேஸ் டூரிசம் என்கிற தலைப்பிலும், 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு யுனைடெட் காலனி இன் அதர் பிளானெட் என்கிற தலைப்பிலும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும்.
கட்டுரைகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மாணவ, மாணவியர் தங்களின் கைப்பட வெள்ளைத்தாளில் 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, தங்களது பெயர், முகவரி, பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர் மற்றும் தொடர்பு எண்ணை குறிப்பிட வேண்டும். மேலும், கட்டுரை எழுதியதை உறுதிப்படுத்தும் வகையில், பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற வேண்டும். கட்டுரைகளை வருகிற அக்.1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில், நிர்வாக அலுவலர், விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வளாகம், மகேந்திரகிரி அஞ்சல், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு என்கிற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். முதல் மூன்று இடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரை எழுதியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். விவரங்களுக்கு 04637-281210, 281940, 281230 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.