கொல்லிமலையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் நகை, பணத்தைத் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆலத்தூர் நாடு ஊராட்சி ஊர்புறம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். தற்போது வறட்சி நிலவுவதால் கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு எஸ்டேட் வேலைகளுக்கு பலர் குடும்பத்துடன் சென்று விட்டனர்.
அதில் 7 பேரின் வீட்டின் பூட்டு வெள்ளிக்கிழமை காலை உடைக்கப்பட்டிருந்தது. அருகில் உள்ளவர்கள் உள்ளே சென்று பார்த்ததில், 7 வீட்டிலும் பீரோவில் இருந்த துணிகள், பொருள்கள் சிதறி கிடந்தன. இதையடுத்து பொதுமக்கள் வாழவந்திநாடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள்கள் இல்லாததை பயன்படுத்தி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடியுள்ளனர். எவ்வளவு பணம், நகை திருட்டுப் போனது என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
கேரள மாநிலத்தில் உள்ள 7 பேரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பிறகுதான் எவ்வளவு பணம், நகை திருட்டு போயுள்ளது என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.