தண்ணீரில் வெப்ப அளவைக் குறைத்தால் கோழிகள் இறப்பைத் தடுக்கலாம் என கோழிப் பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அடுத்த 4 நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்ப அளவுகள் தொடர்ந்து அதிகமாகவே நிலவும். காற்றின் வேகம் குறைவாகவே காணப்படுவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இரவு வெப்ப அளவுகளும் அதிகமாகவே நிலவும் வாய்ப்புள்ளதால், கோழிகளுக்கான தீவனம் மற்றும் நீர் மேலாண்மையை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். குழாய்களில் அடிக்கடி தண்ணீரின் வெப்பத்தை சோதனை செய்து, சூடு இல்லாத தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கோழிகள் இறப்பை பெருமளவு தடுக்கலாம்.
கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சியின் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, பண்ணைகளில் நீர் தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும். மேலும் தகுந்த கோடை கால பராமரிப்பு முறைகளைக் கையாள வேண்டும். தீவனத்தில் வைட்டமின் சி மற்றும் சோடா உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.