பரமத்தி வேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு பூச்சொரிதல் மற்றும் பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.
பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பூ தட்டுகளுடன் நன்செய் இடையாறில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நன்செய் இடையாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோல, பரமத்தி வேலூர் காமாட்சி அம்மன் கோயில்,பகவதி அம்மன் கோயில்,பேட்டை பகவதி அம்மன் கோயில்,பாண்டமங்கலம் மாரியம்மன் கோயில்,ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூர் மாரியம்மன் கோயில் உள்பட பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பால்குட அபிஷேக விழா நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.