ராசிபுரம் அருகே ஏரியின் கரை உடைந்தது: அதிகாரிகள் மீது விவசாயிகள் ஆதங்கம்
ராசிபுரம் அருகே கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக நீர் நிரம்பியிருந்த வெள்ளைக்குட்டை ஏரியில் சனிக்கிழமை கரை உடைந்து நீர் வெளியேறியது.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஏரியின் கரையைப் பலப்படுத்தியிருந்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்காது என ஆதங்கம் தெரிவித்தனர்.
ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான வடுகம், புதுப்பட்டி, நாமகிரிபேட்டை, மெட்டாலா உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வந்தது. இதனால், வடுகம் முனியப்பம்பாளையம் பகுதியில் உள்ள சுமார் 20 ஏக்கர் பரப்பளவுள்ள வெள்ளைக்குட்டை ஏரி நிரம்பியது.
ஏரியிலிருந்து நீர் வழிந்தோடிய நிலையில், சனிக்கிழமை ஏரியின் கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தேங்கியிருந்த நீர் வெளியேறியது. இதனால் விளை நிலங்களில் நீர் புகுந்தது.
மழையால் தேங்கிய நீர் வீணாகியதால், சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் கவலையடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏரியின் கரையைப் பலப்படுத்தியிருந்தால் நீண்ட நாள்களுக்கு சுற்று வட்டாரப் பகுதியின் விவசாயத்துக்கு இந்த நீர் ஆதாரமாக இருந்திருக்கும் என ஆதங்கம் தெரிவித்தனர்.
இதனையடுத்து ராசிபுரம் வட்டாட்சியர் ந.ரத்தினம், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் நிகழ்விடம் சென்று ஏரியின் உடைப்பை ஜேசிபி இயந்திரம் கொண்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.