சொத்து பிரச்னை காரணமாக பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு நாமக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பள்ளிபாளையம் அருகே ஆயக்காட்டூரைச் சேர்ந்தவர் பழனியம்மாள் என்ற பாப்பாத்தி(54). கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி அதிகாலை, பழனியம்மாள் அவரது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சம்பவம் தொடர்பாக பழனியம்மாளின் கணவர் பழனிச்சாமி அளித்த புகாரின்படி, பள்ளிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சொத்து தகராறு காரணமாக பழனியம்மாளை, அவரது உறவினர் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மணி(57) என்பவர் கூலிப்படையை வைத்து கொலை செய்த விவரம் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மணி, பள்ளிபாளையம் கொக்கராயன்பேட்டையைச் சேர்ந்த ஆர்.செல்வம்(34), பி.வேலு என்ற வேலுமணி (31), எம்.ராஜேந்திரன்(37), ஏ.ரமேஷ் என்ற அப்பாவு(33), பவானியைச் சேர்ந்த அல்லா பஹத்(31) ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் வழக்கின் மீது வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன்படி மணி, செல்வம், வேலுமணி, ராஜேந்திரன், ரமேஷ் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பி.இளங்கோ உத்தரவு பிறப்பித்தார். மேலும், வழக்கில் தொடர்புடைய அல்லா பஹத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.