ராசிபுரம் அருகே குடிநீர் கோரி செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் குடிநீர் விநியோகிக்கக் கோரி இளைஞர்கள்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் குடிநீர் விநியோகிக்கக் கோரி இளைஞர்கள் ஐந்து பேர் செல்லிடப்பேசி கோபுரத்தில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் ஏறி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
 அய்யம்பாளையம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமப் பகுதியில் கடந்த 3 மாதங்களாகவே சரிவர குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கிராமத்துக்கு உடனடியாக குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி, சரவணன், ரவி, மோகன்ராஜ், ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் அப்பகுதியில் உள்ள 60 அடி உயர செல்லிடப்பேசி கோபுரத்தில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களை பார்த்து அங்கு கூடிய பல்வேறு தரப்பினரும் சமரசம் பேசியும் இளைஞர்கள் கீழே இறங்கவில்லை. குடிநீர் வழங்கினால்தான் கீழே இறங்குவோம் என வலியுறுத்தினர்.
 தகவல் அறிந்ததும் நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் நிகழ்விடம் சென்று பேசினர். நிகழ்விடத்துக்கு வந்த ராசிபுரம் டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.
 இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு இளைஞர்கள் கீழேஇறங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com