தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசுப் பணியாளர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம்- கருத்தரங்கம் நாமக்கல்லில் டிசம்பர் 21, 22-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில், மாவட்டம்தோறும் உள்ள அனைத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றை நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் டிசம்பர் 21, 22 ஆம் தேதிகளில் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியன நடைபெறுகின்றன.
இதில், தமிழ் வளர்ச்சித் துறையின் உயர் அலுவலர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர். எனவே, அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலிருந்தும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.