பூச்சிக்கொல்லிகளை சரியான நேரத்தில் சரியான பருவத்தில் சரியான அளவுடன் பயன்படுத்த வேண்டும் என்று நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரி முதல்வர் கே.பிரபாகரன் கூறினார்.
பாதுகாப்பான முறையில் பூச்சி, பூஞ்சாணம், களைக்கொல்லிகளை பயன்படுத்துதல் குறித்த கருத்தரங்கு, விழிப்புணர்வு முகாம் ஆகியன நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின.
இதில், பிஜிபி வேளாண்மை கல்லூரி முதல்வர் கே.பிரபாகரன் பேசியதாவது:-
விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பூச்சி, பூஞ்சாணக் கொல்லிகளை பயன்படுத்தும்போது பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும். இதற்காகத் தொழில்நுட்ப கையேடுகளில் உள்ளபடி பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.
பூச்சிக் கொல்லிகளை சரியான நேரத்தில் சரியான பருவத்தில் சரியான அளவுடன் பயன்படுத்த வேண்டும் என்றார்.
இதையடுத்து, களைக்கொல்லிகளைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து மரவள்ளி- ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் து,ராஜாவும், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் முறைகள்- தொழில்ட்பங்கள் குறித்து வேளாண் அறிவியல் மைய உதவிப் பேராசிரியர் சி.சங்கரும் பேசினர்.
மேலும், பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிறுவனங்கள் கண்காட்சி அரங்குகளை அமைத்து விவசாயிகளுக்கு பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லிகளைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினர்.
நிகழ்வுக்கு நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எம்.சுப்பையா தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா
வரவேற்றார்.
மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மைய உதவி இயக்குநர் எஸ்.ஞானசம்பந்தன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் புவனேஸ்வரி, பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ப.முருகன், நாமக்கல் மாவட்ட பூச்சிக் கொல்லி விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள், 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.