கல்வி அல்லாத பணிகளில் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மலையடிவார நகராட்சி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் திருவேங்கடம் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் அரிகரன் வரவு, செலவு கணக்கை சமர்பித்தார்.
கூட்டத்தில், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக நிரப்ப வேண்டும். தாற்காலிகப் பணியிடங்கள் அனைத்தையும் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்க வேண்டும். அனைத்து ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர் பணி உருவாக்கப்பட வேண்டும். கல்வி அல்லாத பணிகளில் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.