பரமத்திவேலூர் அருகே தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் இயங்கி வரும் இரு டாஸ்மாக் கடைகளையும் மூடக் கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை கடைகளை முற்றுகையிட்டனர்.
பரமத்தி வேலூர் அருகே தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இது பெண்களுக்கும், பொதுமக்களும் மிகுந்த இடையூறாக உள்ளது எனக் கூறி பொதுமக்கள் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரமத்தி வேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுஜாதா அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் நடவடிக்கை எடுக்காத நிலையில் அதே பகுதியில் மீண்டும் ஒரு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதே பகுதியில் மூன்றாவதாக மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் தகவல் அறிந்தனர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கெனவே இயங்கும் இரு மதுக்கடைகளையும் மூடக் கோரியும் இரு டாஸ்மாக் கடைகளையும் முற்றுகையிட்டனர்.
இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மூடினர். தகவல் அறிந்து வந்த பரமத்தி வேலூர் போலீஸார் பொதுமக்களை சமரசப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.