சாலையை சீரமைக்க கோரிக்கை
பள்ளி வாகனங்கள் செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட தெப்பக்குலக்காடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு: தெப்பக்குலக்காட்டுக்கு மேற்குபுறம், ஊரணிக்கு நேர் வடபுறம் எல்லை வரை செல்லும் பாதையின் இருபுறமும் விவசாய நிலம் உள்ளது. பள்ளி வாகனங்கள் இப்பகுதிக்கு வந்து செல்ல இடையூறாக இருந்ததால், சாலையின் இருபுறமும் இருந்த முள்செடிகள் மற்றும் மரங்களை வெட்டி அகற்றினோம்.
மேலும் தேவையான இடத்தில், அவரவர் நிலங்களை விட்டு பாதையை சரி செய்தோம். இந்நிலையில், இப்பாதைக்கு சம்பந்தப்பட்ட தனி நபர் எங்களை வேலை செய்யவிடாமல் தடுப்பதுடன், ஆக்கிரமிப்பு செய்த இடத்தை தர மறுக்கிறார்.
அதனால் பள்ளி வாகனங்கள் வராததால், குழந்தைகளின் படிப்பு பாதித்து வருகிறது. எனவே, பள்ளிக் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாத வகையில், பள்ளி வாகனங்கள் வந்து செல்ல சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.