நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கியதில் சத்துணவு பெண் அமைப்பாளர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
ஏளூர் ஊராட்சிக்குள்பட்ட பெருமாகவுண்டம்பட்டி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக இருப்பவர் தமிழரசி (55). இப் பெண்ணின் கணவர் கோபால். இவர்களுக்கு சிவக்குமார், கார்த்திக், முரளி என 3 மகன்கள் உள்ளனர். தமிழரசி திங்கள்கிழமை காலை தனது வீட்டின் அருகே இருந்த தொட்டியில் தண்ணீர் எடுக்கச் சென்றாராம். அப்போது, தீடீரென மேலே இருந்த மின்கம்பி அறுந்து அவர் மீது விழுந்ததாம். இதில் மின்சாரம் பாய்ந்து தமிழரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.