சர்வதேச கராத்தே போட்டிக்கு நாமக்கல் மாணவியர் தேர்வு

மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டிக்கு நாமக்கல் மாணவியர் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டிக்கு நாமக்கல் மாணவியர் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 இலங்கை தலைநகர் கொழும்புவில் சுகந்தாசா உள்விளையாட்டு அரங்கில், ஆசிய அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, இலங்கை, ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட தற்காப்புக் கலை வீரர்கள் கலந்துகொண்டனர்.
 தமிழகத்திலிருந்து நாமக்கல் சோட்டோ-சோட்டோகான் கராத்தே வீராங்கனையர் காவ்யா, மகேஸ்வரி ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற தகுதித் தேர்வில் வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து, 19-ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான கட்டா போட்டியில் இருவரும் கலந்துகொண்டனர்.
 போட்டியில் காவ்யா சிட்டே, கென்கட்சூ என்ற ஜூனியர் பிரிவில் தங்கம் வென்றார். மகேஸ்வரி சீனியர் பிரிவில் கான்கொடாய் மற்றும் ஜியோன் பிரிவில் தங்கம் வென்றார்.
 வெற்றிபெற்ற இருவரையும் நாமக்கல் சோட்டோ-சோட்டோகான் சங்கத்தின் சார்பில் செயலர் கீர்த்திவர்மன், துணைத் தலைவர் நடராஜன், முதன்மைப் பயிற்சியாளர்கள் செல்லக்குமார், அசோகன், தினேஷ் பானு, கருப்பண்ணன், சண்முகசுந்தரம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 நாமக்கல்லைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் தங்கம் வென்ற வீராங்கனையரைப் பாராட்டி பரிசு வழங்கினர். இவர்கள் இருவரும் வரும் ஜூன் முதல் வாரம் மலேசியாவில் சோரின்ரியூ, சோரின்கான் கராத்தே சங்கத்தின் சார்பில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com