பரமத்தி வேலூரை அடுத்துள்ள எஸ்.வாழவந்தியில் முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காலை அப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம் எஸ்.வாழவந்தி ஊராட்சியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்பொழுது அப் பகுதியில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் வீடுகளுக்கு முறையாக தண்ணீர் வழங்கவில்லை என பலமுறை ஊராட்சி நிர்வாகத்தினருக்கும், மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் புகார் அளித்திருந்தனர். ஆனால், இதுவரை முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலை காலிக் குடங்களுடன் நாமக்கல்லில் இருந்து பாலப்பட்டி செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பேருந்து மூலம் அப் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு வேலைக்கும் செல்வோர் கடும் அவதிக்குள்ளாயினர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மற்றும் பரமத்தி காவல்துறை ஆய்வாளர் குலசேகரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக தண்ணீர் வழங்கப்படும் எனக் கூறியதை அடுத்து, அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப் பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.