தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் இயங்கி வரும் சிறப்புப் பயிற்சி மையக் குழந்தைகளுக்கு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம், பள்ளிபாளையம், பரமத்தி மற்றும் பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள 15 சிறப்புப் பயிற்சி மைய மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் அ.போ. அந்தோணி ஜெனிட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், தன்னார்வ ஆசிரியர் மற்றும் களப்பணியாளர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.