ராசிபுரம் அருகே கரையான்திண்ணிபுதூர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் பெய்த மழையால் இடி தாக்கி கட்டடம் சேதமடைந்தது.
கரையான்திண்ணிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (62), இவரது வீட்டின் அருகே, இவருக்குச் சொந்தமான இரு அடுக்கு மாடி கட்டடம் உள்ளது. இதில் முதல் தளத்தில் பெட்டி கடை நடத்தி வருகிறார். மேல்தளம் தனி அறையாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு பெய்த மழையைத் தொடர்ந்து, அப்பகுதியில் கடும் இடி மின்னல் ஏற்பட்டது.
இதையடுத்து சுமார் 1 மணியளவில் இடிதாக்கியதில் இவரது கட்டடத்தின் மேல் பகுதி சேதமடைந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த வரதராஜனுக்கு, கட்டடம் மீது இடிதாக்கியது தெரியவந்தது.
கட்டடத்தின் மின் மீட்டர் மீது பாய்ந்த இடி, கட்டடம் முழுவதும் பரவி சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழ்தளத்தில் கடையில் இருந்து பொருள்கள் சேதமடைந்தன. மின் ஒயர்கள் முழுவதும் தீயில் கருகின. இந்த இடி தாக்குதலில் அருகில் இருந்து மற்றொரு ஓட்டு வீடும் சேதம் அடைந்தது.
தகவல் அறிந்து, நிகழ்விடம் வந்த வருவாய்த் துறையினர், மின்வாரிய அதிகாரிகள் மின்னல் தாக்கியது குறித்து விசாரணை நடத்தினர். வழக்கமாக மேல்தளத்தில் வரதராஜ் மகன் ரமேஷ் தூங்குவது வழக்கம். ஆனால் மழை பெய்ததால், கீழே உள்ள மற்றொரு வீட்டில் படுத்திருந்தார். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.