ராசிபுரம் புதுப்பாளையம் செல்லும் ஒருவழிப் பாதை சீரமைப்புப் பணிகள் ரூ.2 கோடி மதிப்பில் துவங்கிட அரசு அனுமதித்துள்ளதையடுத்து, சாலையமைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.
ராசிபுரம் நகரில் புதைக்குழி சாக்கடைத் திட்டத்தின் கீழ் பணிகள் சுமார் ரூ.56 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, நகரின் அனைத்து பகுதிகளிலும் குழாய்கள் அமைக்க சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியாக காட்சியளிக்கின்றன. மேலும், இந்தச் சாலைகளால் போக்குவரத்தில் கடும் நெரிசலும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு பிப்ரவரியில் முடிக்க வேண்டிய புதைகுழி சாக்கடைத் திட்டம், இதுவரை 65 சதம் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, பாதாளச் சாக்கடைத் திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு, ராசிபுரம் நகரச் சாலைகள் விரைவில் சீரமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் நகரின் முக்கிய பிரதான சாலையான ஒரு வழிப்பாதையான புதுப்பாளையம் சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் உருளும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து, போராட்டக் குழுவினர் அனைவரும் கையில் கங்கனம் கட்டி தேதி குறித்து இந்த போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர். இந் நிலையில், இந்த சாலையை அமைக்க அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சாலை பணிகள் விரைவில் துவங்கி, அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, போராட்டக் குழுவினரை காவல் துறையினர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, பல்வேறு அமைப்பினரின் சாலையில் உருளும் போராட்டம் கைவிடப்பட்டது. பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கையில் கட்டிய கங்கனத்தை நகராட்சி முன்பாக கூடி, அவிழ்த்து போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். புதுப்பாளையம் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு, இப்பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.