புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, பாண்டமங்கலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பாண்டமங்கலத்தில் பஞ்சபாண்டவர்கள் வழிபட்டதாகக் கூறப்படும் ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் காலையில் ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றன.
பின்னர், அம்பாள் திருத்தேரில் கோயில் வளாகத்தை உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இரவு 7 மணிக்கு திருக்கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் வட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுக்குச் செல்லும் சாலையில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள், பரமத்தி கோதண்டராம சுவாமி மற்றும் நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன.