பரமத்தி வேலூர், லட்சுமி நகரில் வசிக்கும் கோயில் பூசாரி வீட்டில் மர்ம நபர்கள் திருட முயன்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பரமத்தி வேலூர் செட்டியார் தெரு லட்சுமி நகரில் வசிப்பவர் ராஜலிங்கம் (48). இவர் நன்செய் இடையாறு கோயிலில் பூசாரியாக உள்ளார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கோயில் வளாகத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் தங்கி பூஜைகள் செய்து வருகிறார். சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் ராஜலிங்கத்தின் வீட்டின் பூட்டை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று இரண்டு பீரோக்களை உடைத்துள்ளனர்.
ஆனால் வீட்டில் நகை மற்றும் பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்து ராஜலிங்கம் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.