பரமத்திவேலூர் பகுதியிலிருந்து அதிக தண்ணீர் பாரம் ஏற்றி வந்த 11 டேங்கர் லாரிகள் மற்றும் உரிய அனுமதி பெறாமல் தமிழகத்தில் இயங்கிய வெளிமாநில வாகனங்களுக்கு பரமத்தி வேலூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மொத்தம் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதித்தார்.
பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்தும் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் ஆலைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்வதாகவும், முறையான ஆவணங்கள் மற்றும் சரியான எடையில் எடுத்துச் செல்வதில்லை எனவும் நாமக்கல் தெற்கு மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நாமக்கல் தெற்கு மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் துரைசாமி உத்தரவின் படி, பரமத்தி வேலூர் பகுதிநேர வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் நித்யா திங்கள்கிழமை பரமத்தி வேலூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதில் அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக தண்ணீர் பாரம் ஏற்றி வந்த 11 டேங்கர் லாரிகளுக்கு ரூ. 70 ஆயிரம் அபராதமும், உரிய அனுமதியின்றி தண்ணீர் ஏற்றி வந்த வெளி மாநில பதிவெண் கொண்ட டேங்கர் லாரிக்கு ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
மேலும் உரிய அனுமதியின்றி இயங்கிய வெளி மாநில பதிவெண் கொண்ட ஜேசிபி வாகனத்துக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தார். சாலை விதிகள் மீதான இந்த வாகன சோதனை தொடரும் என ஆய்வாளர் நித்யா தெரிவித்தார்.