திருச்செங்கோட்டில் மாங்காய் லோடு ஏற்றி வந்த பிக்கப் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மாங்காய் குத்தகைதாரர். இவரது வேலையாள்கள் ஒரு பிக்கப் ஜீப்பில் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மாணிக்கம்பாளையம் பகுதி தோட்டத்திலிருந்து மாங்காய்களை லோடு ஏற்றிக் கொண்டு எடப்பாடி நோக்கிச் சென்றனர்.
வாகனத்தை ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி ஓட்டி சென்றார். ஜீப் குமரமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக ரோட்டின் ஓரமாக ஜீப்பை ஓட்டுநர் சாலையின் கீழே இறக்கியுள்ளார்.
தரைமட்டத்திலிருந்து ரோடு மிக உயரமாக இருந்ததால் நிலை தடுமாறி ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாங்காய்கள் கொட்டி மூடியதால் செல்வி மற்றும் கருப்பம்மாள் என்ற இரு பெண்கள் படுகாயமடைந்தனர். மற்ற 4 பேர் லேசான காயங்களுடன் தப்பினர். காயமடைந்த அனைவரும் நாமக்கல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.