பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மனிதச் சங்கிலி போராட்டம் நாமக்கல்லில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை 500 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். 2016இல் 40,000 பெண்கள் பாலியல் பலாதாகாரம் செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஏழை, தலித், பழங்குடியினர் பெண்களும், குழந்தைகளும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண்களை சக மனிதர்களாகப் பார்க்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது
இச் சம்பவங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. நாமக்கல்லில் பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய மனிதச் சங்கிலி சேலம் சாலை வரை தொடர்ந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, பெருமாள், அசோகன், வேலுசாமி, ஜெயமணி, சுரேஷ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் நன்றி கூறினார்.