பரமத்தி வேலூர் அரசு நிதி உதவி பெறும் கந்தசாமி கண்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தம் அடையாள சின்னமாக கட்டப்பட்ட ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான வகுப்பறைக் கட்டடத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து, விழா மலரை வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார்.
கந்தசாமி கண்டர் அறநிலையங்களின் தலைவர் டாக்டர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டாக்டர் நெடுஞ்செழியன் வரவேற்றுப் பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி திட்ட விளக்க உரையாற்றினார். கந்தசாமி கண்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மூலம் கட்டப்பட்ட ரூ.1 கோடிய 8 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறைக் கட்டடத்தை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்து, விழா மலரை வெளியிட்டு, நன்கொடையாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசியதாவது:
இப் பள்ளிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த போது போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், தேர்ச்சி சதவிகிதம் குறைந்து இருந்தது. அப்பொழுது ஆசிரியர்கள் முழுக் கவனம் செலுத்தி 100 சதவிகித தேர்வு பெற அறிவுரை வழங்கிச் சென்றேன். அதேபோல் இரண்டு ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது பெருமை தருவதாக உள்ளது என்றார்.
மேலும் பள்ளி மிகவும் சிரமப்பட்டு முன்னாள் மாணவர்கள் மூலம் நிதி திரட்டி புதிய வகுப்பறைக் கட்டடத்தை கட்டிய பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி, முதுநிலை ஆசிரியை குணசுந்தரி உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கு பாரட்டுத் தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் கந்தசாமி கண்டர் அறநிலையங்களின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.
விழாவில் பரமத்தி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பள்ளிக்கல்வித் துறையினர், கந்தசாமி அறநிலையங்களின் நிர்வாகிகள், வருவாய்த் துறையினர், முன்னாள் ஆசிரியர்கள்,முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவர் அருண் நன்றி கூறினார்.