திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 148 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
அண்மையில் இரு நாள்கள் நடைபெற்ற இந்த முகாமில் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் பல மாதங்களாக தீர்வு காணப்படாமல் இருந்த 52 வழக்குகள் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதிபதி வேல்மயில், 52 வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கினார். அதன்படி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ரூ. 37 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
அதுபோல திருச்செங்கோடு நகரப் போக்குவரத்து காவல் துறையினர் அதிக பாரம், அதிக வேகம், மது போதையில் வாகனம் ஓட்டுதல், தலைக் கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல் என சாலை விதிமீறல் வழக்குகளாக பதியப்பட்ட 96 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டன.
அதில் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ரூ. 73 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இதன்படி இரண்டு நாள்களில் மொத்தம் 148 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.