திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் மகா குண்டம் திருவிழா வரும் 27-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் குண்டம் திருவிழா நிகழாண்டு கடந்த 16-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து அம்மனுக்கு தினசரி சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடந்து வருகின்றன. குண்டம் இறங்கும் பக்தர்கள் மலையடிக்குட்டையில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாகக் கோயிலுக்கு வருதல் வியாழக்கிழமை நடைபெற்றது. இரவு அக்னி சட்டி ஏந்தி சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது. 23-ஆம் தேதி மாலை திருவிளக்கு பூஜை, அக்னி கரகம், அலகு குத்துதல் நடைபெறும்.
25-ஆம் தேதி சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை நடைபெறும். 26-ஆம் தேதி பூச்சொரிதல் நடத்தப்பட்டு 27 -ஆம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், குண்டத்து பூஜை நடத்தப்பட்டு இரவு மங்கள வாத்தியங்கள் முழங்க புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெறும்.
அதைத் தொடர்ந்து மகா குண்டம் திருவிழா நடைபெறும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளதால் கோயி நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத் துறையினர் சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவை ஒட்டி திருச்செங்கோடு- ஈரோடு, திருச்செங்கோடு-பரமத்தி வேலூர் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், கூடுதல் பாதுகாப்பு போலீசார் ஈடுபடப் போவதாகவும் திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.