ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழாய்வுத் துறை பேராசிரியர் எழுதிய நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடந்தது.
இக் கல்லூரியின் தமிழாய்வு துறைப் பேராசிரியர் முனைவர் க.செல்வராஜ் கொல்லிமலை, இலக்கிய பண்பாட்டுப்பதிவுகள், சமுதாய நோக்கில் கொங்கு வட்டார புதுக்கவிதைகள் என்ற நூல் எழுதியுள்ளார். இதற்கான வெளியீட்டு விழாவில், திருவள்ளுவர் அரசுக் கல்லூரி தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியர் இரா.கலைச்செல்வி வரவேற்றார்.
கல்லூரியின் முதல்வர் சீ.மணிமேகலை விழாவில் தலைமை வகித்து, மூன்று நூல்களையும் வெளியிட்டுப் பேசினார். தமிழாய்வு துறைத் தலைவர் ர.வேணுகோபால் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மூன்று நூல்களின் முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் க.செல்வராஜ் ஏற்புரையாற்றினார். விழாவில், கணிதத் துறை தலைவர் சதாசிவம், அரசியல் அறிவியல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்த் துறை பேராசிரியர்கள் ந.தனசேகர், அண.செல்வகணபதி, இரா.ரம்யாமகேஸ்வரி, து.ரேணுகாதேவி, ஆங்கிலத் துறை பேராசிரியர் கலைவாணன் உள்ளிட்டோர் பேசினர்.