ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் வடுகம்பாளையம் பகுதியில் உள்ள சேகோ ஆலை உரிமையாளர் வீட்டில் ரொக்கம், நகை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 55 சவரன் நகை மீட்கப்பட்டது.
வெண்ணந்தூர் வடுகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஏ.ஆர்.துரைசாமி (70) . இவரது மகன் சதாசிவம் சேகோ ஆலை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் கடந்த 21.03.17 -ல் குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தபோது, அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, 40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது . இது சம்பந்தமாக வெண்ணந்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந் நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு இதே சேகோ ஆலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்த ஆயிபாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மல்லூர் பாரப்பட்டியைச் சேர்ந்த தங்கவேலுடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதனையடுத்து, காவல் துறையினர் வெண்ணந்தூர் பகுதியில் பதுங்கியிருந்த பாரப்பட்டியை சேர்ந்த தங்கவேலையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இருவரும் சேர்ந்து கொள்ளையடித்தை ஒப்புக் கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீஸார் 55 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். இவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் கைது செய்யப்பட்ட மல்லூர் பாரப்பட்டியை சேர்ந்த தங்கவேல் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.