நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி பொன் விழாவையொட்டி, தமிழ்த் துறையின் சார்பாக திருவள்ளுவர் தினம் மற்றும் நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அ.லீலாகுளோரிபாய் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் பி.கந்தசாமி வரவேற்றார். உதவி பேராசிரியர் துரை.ரவிக்குமார் எழுதிய ஆண் பேசும் பெண்ணியம், மூன்றாம் பிறை, யாப்பருங்கலக்காரிகை, தொல்காப்பியம் எழுத்து ஆகிய நான்கு நூல்களை ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் வெளியிட்டார். ஓய்வுபெற்ற கலால் துறை ஆணையர் சி.க.கருப்பண்ணன் நூல்களைப் பெற்றுக் கொண்டார்.
நாமக்கல் தமிழ்ச் சங்க இணைச் செயலர் ராசாக்கவுண்டர் பேசினார். நூல்கள் குறித்து தமிழ்த் துறைத் தலைவர் மு.நடராஜன், உதவி பேராசிரியர்கள் அ.சின்னதுரை, க.பூபதி ஆகியோர் பேசினர்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, பொங்கல் வைத்து மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளை உதவி பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் ஒருங்கிணைத்து நடத்தினார்.