மன அழுத்தம், பதற்றத்தைக் குறைக்க சுவாச முறை அவசியம். ஆழமான சுவாச முறைக்கும், படிப்புக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன என நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் குணமணி தெரிவித்தார்.
கொல்லிமலை வல்வில் ஓரி அரசு உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளியில் நாமக்கல் மாவட்ட மனநல திட்டம் மூலம் மன அழுத்தம், தற்கொலை தடுப்பு, செல்லிடப்பேசி தீமைகள் குறித்த மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சிவசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் குணமணி பேசியது:
மாணவர்கள் நன்றாக படிக்க நல்ல தூக்கம் தேவை. குறைந்தபட்சம் 6 முதல் 7 மணி நேரம் தூங்க வேண்டும். குறைந்தபட்சம் 6-ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு மணி நேரம் படிப்பது நன்று. தினமும் படிக்க வேண்டும். 12 வயது முதல் 18 வயது வரை மாணவ, மாணவியர் கவனச் சிதறல் இல்லாமல் இருக்க வேண்டும். இல்லையெனில், வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை சந்திக்க நேரிடும். சுயக் கட்டுப்பாடு, ஒழுக்கம் இரண்டையும் கடைப்பிடித்து வாழும்போது தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். இவை இரண்டும் நம்மை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும். செல்லிடப்பேசியில் இணைய வசதி உள்ள காரணத்தால் ஒவ்வொருவரும் தூங்கும் நேரம் தள்ளிப்போகிறது.
இது உங்களின் உடலையும், மனதையும் கெடுக்கும். அதனால், இதன் பயன்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்.
மன அழுத்தம், பதற்றத்தை குறைக்க சுவாச முறை அவசியம். சுவாசித்தல் என்பது மூக்கின் வழியாக நடைபெற வேண்டும். வாய் வழியாக சுவாசிக்கக் கூடாது. சுவாசமானது அடிவயிறு வரை சென்று வர வேண்டும். மார்புவரை மேலோட்டமாக சுவாசிக்கக் கூடாது. ஆழமான சுவாச முறைக்கும் படிப்புக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. ஆழமான சுவாசமானது பதட்டத்தைக் குறைக்கிறது என்றார்.
மனநல ஆலோசகர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மனநல உளவியலாளர்கள் அர்ச்சனா, அம்பிகா, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.