நாமக்கல் அருகே கோழிப்பண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த தம்பதியினரை சார்-ஆட்சியர் வெள்ளிக்கிழமை மீட்டார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பெருமாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(36). இவர் மனைவி சசிகலா(29) மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன், சின்னமுதலைப்பட்டி அருகே செல்லிபாளையம் அருகே உள்ள தனியார் கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந் நிலையில், அங்கு சரியான ஊதியம், உணவு, விடுமுறை அளிக்காமல் கொத்தடிமைகளாக நடத்தியுள்ளனர். இதுகுறித்து ஈரோட்டில் உள்ள கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள ரீடு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி கோழிப்பண்ணையில் விசாரணை நடத்தியதில் தம்பதியருக்கு மிகக் குறைந்த கூலி வழங்குவதும், விடுமுறை அளிக்காமல் வேலை வாங்கியதும் தெரியவந்தது.
இதனையடுத்து, நாமக்கல் சார்-ஆட்சியருக்கு பழனிசாமி தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, சார்-ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி, செல்லிபாளையத்தில் உள்ள ராமசாமி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணைக்கு நேரில் சென்று, சரவணன், சசிகலா இருவரையும் மீட்டு அழைத்து வந்தார். மேலும், சம்பந்தபட்ட கோழிப்பண்ணை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யவும் நாமக்கல் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
விசாரணைக்கு பிறகு அரசு வழங்கும் நிவாரணம் ரூ.20,000-த்தை வழங்கி, இருவரையும் சொந்த ஊரான பெருமாம்பாளையத்துக்கு அனுப்பிவைத்தார்.