நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களையும் ஒருங்கிணைக்கும் சிஎஸ்ஐ (கோர் சிஸ்டம் இன்டகிரேட்) என்ற புதிய தொழில்நுட்பம் தொடங்கப்பட்டது.
நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், புதிய தொழில்நுட்பத்தை நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ப.முருகேசன் தலைமை வகித்து தொடக்கிவைத்தார். விழாவில் அஞ்சல் அதிகாரிகள் கூறியது:-
அஞ்சல் துறை தற்போதைய சூழலுக்கு ஏற்ப வங்கி சேவை, பார்சல் சேவை, கல்வி நிறுவன விண்ணப்பங்கள் விற்பனை, சிறப்பு தபால் தலை வெளியீடு, பாஸ்போர்ட் சேவை, ஏடிஎம் சேவை என வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கேற்ப அஞ்சல் அலுவலகங்கள் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அஞ்சலக சேவை, மனிதவள மேம்பாட்டு பணிகளில் சிஎஸ்ஐ என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கோட்டத்துக்குள் உள்ளடங்கும் அஞ்சல் நிலையங்கள் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும். அத்துடன் அஞ்சல் அலுவலகங்கள், ஊழியர்களை கண்காணிக்க முடிவதுடன், தவறுகளை தவிர்க்கவும் முடியும்.
வாடிக்கையாளர்களும் தங்கள் அஞ்சல் சேவை நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஐடி மூலம் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும் என்றனர்.
நிகழ்வில் சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் பி.ஆறுமுகம், சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கே.அருணாசலம், கோவை மண்டல உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் (தொழில்நுட்பம்) டி.ஜெயகீதா, நாமக்கல் தலைமை அஞ்சலக அதிகாரி ஜி.சாந்தி, தலைமையிடத்து உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் பி.பார்த்திபன், நாமக்கல் கிழக்கு உட்கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் டி.ராதாகிருஷ்ணன், நாமக்கல் மேற்கு உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் சி.நிரஞ்சனாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.