கொல்லிமலையில் கோடையில் குடிநீர் பிரச்னையைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் தெரிவித்தார்.
கொல்லிமலையில் கோடையில் குடிநீர் பிரச்னையைச் சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த சி.சந்திரசேகரன் பேசியதாவது:-
கொல்லிமலை பகுதியில் எங்கு குடிநீர் பிரச்னை உள்ளது என்பதை ஆய்வு செய்து அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும்.
இதன்படி, கிணறு அல்லது குடிநீர் குழாய் விரிவாக்கம், சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படும்.
குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர் பி.தங்கமணி ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவையான அளவு நிதியை பெற்று போர்க்கால அடிப்படையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட
சம்பந்தபட்ட இடங்களில் ஆய்வு நடத்தி, தேவையான இடங்களுக்கு புதிய கட்டடம் கட்ட அனுமதி அளிக்கப்படும்.
கூட்டத்தில் பங்கேற்காத ஊராட்சி மன்றச் செயலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) செல்வராஜ், ஒன்றிய பொறியாளர் அருண், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் மாதேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.