கேட்பாரற்று கிடந்த ரூ.30,000-த்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், பெரிய கடைவீதியில் கடந்த 3 ஆம் தேதி கேட்பாரற்று கீழே கிடந்த ரூ.30,000-த்தை ராசிபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி என்பவர் கண்டெடுத்து, அருகில் யாரும் உரிமை கோராததால், ராசிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆட்டோ ஓட்டுநரின் இந்தச் செயலை பாராட்டும் விதமாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, மாவட்ட காவல் அலுவலகத்திற்கு புதன்கிழமை அவரை நேரில் அழைத்து சான்று மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கண்டெடுக்கப்பட்ட பணத்திற்கு இதுவரை எவரும் உரிமை கோரி வரவில்லை. எனவே உரிமையானவர்கள் தகுந்த ஆதாரத்துடன் ராசிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளரை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.